Sep 2, 2009

என்னைப் பற்றி கொஞ்சம்

thanks to அரங்கப்பெருமாள்
The Rules:1. Link the person who tagged you.
2. Post the rules on your blog.
3. Share the ABCs of you.
4. Tag 4 people at the end of your post by linking to their blogs.
5. Let the 4 tagged people know that they have been tagged by leaving a comment on
their website.
6. Do not tag the same person repeatedly but try to tag different people, so that there
is a big network of bloggers doing this tag.

The Tag:
1. A – Available/Single? single
2. B – Best friend? : not one but many
3. C – Cake or Pie?: Cake
4. D – Drink of choice? : water always
5. E – Essential item you use every day? :Laptop
6. F – Favorite color? : Black
7. G – Gummy Bears Or Worms?: neither
8. H – Hometown? -
karur
9. J – January or February?
march
10. K – Kids & their names? am single
11. L – Life is incomplete without?
without love n affection
12. M – Marriage date? who knows
13. N – Number of siblings? 1 younger brother
14. O – Oranges or Apples? both
15. P – Phobias/Fears?
nothing as such..
16. Q – Quote for today? : Pain doesn't hurt, when it is the one you have ever felt
17. R – Reason to smile? : i just want to smile to keep myself cheered up n cheer up ppl around me
18. S – Season? spring
19. T – Tag 4 People?
யாத்ரா, ஜாம்பஜார் ஜக்கு, ரிலாக்ஸ் ப்ளீஸ், பாலா
20. U – Unknown fact about me? should think about it
21. V – Vegetable you don't like? most of d vegetables especially bitterguard
22. W – Worst habit? believe everyone
23. X – X-rays you've had? right foot 

24. Y – Your favorite food? curd rice, chicken, sea foods


  1. அன்புக்குரியவர்கள்: நேசத்தோடு பழகும் அனைவரும்
  2. ஆசைக்குரியவர்: இன்னும் எனைத் தேடி வரவில்லை
  3. இலவசமாய் கிடைப்பது: நட்பு
  4. ஈதலில் சிறந்தது: கல்வி
  5. உலகத்தில் பயப்படுவது: எனக்கு மட்டும்
  6. ஊமை கண்ட கனவு: பாடுவதற்கு
  7. எப்போதும் உடனிருப்பது:நண்பர்கள், கனவுகள்
  8. ஏன் இந்த பதிவு: அரங்கப்பெருமாள் அழைத்ததால்...
  9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது: கல்வி
  10. ஒரு ரகசியம்: பல ரகசியங்கள் என் மனதுள் ஆழ புதைந்து கிடக்கின்றன
  11. ஓசையில் பிடித்தது: குழந்தையின் சிரிப்பு, அழுகை இரண்டும், ரயில் ஓசை
  12. ஔவை மொழி ஒன்று: அறம் செய்ய விரும்பு
  13. (அ)ஃறிணையில் பிடித்தது:எழுதுகோல்



Aug 20, 2009

உள்ளுறையும் கடல்

அனுப்பப்படாத குறுஞ்செய்திகளால்
நிரம்பிக்கிடக்கிறது அலைபேசி
எழுதித் தீராத சொற்களுக்காகக்
காத்திருக்கின்றன மின்னஞ்சல்கள்
உலர்ந்து போன
முடிக்கப்படாத கவிதைகள்
கொட்டப்படாத உணர்வுகளோடு
அழுத்திக்கொண்டிருக்கும் பிரியம்
வதை முகாமென அதீதமாய் இம்சிக்கிறது
பசுவின் வலி காக்கைக்குப்
புரிய நியாயமில்லை

சின்ன சின்ன சீண்டல்களுக்கும்
செல்ல ஊடல்களுக்குமான
ஏக்கங்களையும்
வெளிப்படுத்தப்படாத
உணர்வுகளையும் ஆழ
புதைத்து வைத்திருக்கிறேன்...
இஷ்டப்பட்டு கஷ்டப்படுகிறேன்
எரிமலை வெடிந்து கசிந்துவிடாமல்
கண்ணீரை உள்ளிழுத்து
மௌனம் காக்கிறேன்
கொஞ்சம் கொஞ்சமாய்
வசம் இழந்துகொண்டிருக்கிறேன்...

என் நினைவுகள்
உனக்கு மட்டுமல்ல
எனக்குமே வருவதில்லை...
உன் காலடி வரை வந்து
ஸ்பரிசிக்காமலே திரும்பிவிடுகின்றன
உனக்கான என் பிரியங்கள்
உன் நினைவுகள் தூரத்தில்
ரயில் தண்டவாளத்தின் அதிர்வுகளாய்
நிம்மதியிழக்கச் செய்கிறது
எப்போதும் என்னை....

உன் ஒற்றைச் சொல்லை தலையசைப்பை
புன்னகையை எதிர்நோக்கியே
என் நாட்கள் விடி(மடி)கின்றன...
விடிகின்ற பொழுதுக்காய்
விழிதிறந்தே காத்திருக்கிறேன்...
விடியலின் வெளிச்சமுமென்னை
பரிகசித்துப் போகிறது.

Aug 13, 2009

வலி


வலிகளின்றி வாழ்க்கை இல்லை...
நான்...
வலிகளை ம(றை)றக்கத் தெரிந்தவள்...
அடக்கக் கற்றுக்கொண்ட கோபங்களுக்கு
ஒரே வடிகாலாய் என் கண்கள்...
வெடிக்க நினைக்கும்போதே
ஊமையாய்க் கரைந்துவிடும்...
மறுக்கப்பட்ட கனவுகளோடும்
நிராகரிக்கப்பட்ட விருப்பங்களோடும்
புன்னகையோடு வாழப் பழகியவள்...
இழக்க விரும்பா
குழந்தைத்தனத்தோடு
வாழ்கையை முழுமையாய்
வாழ்ந்திடத் துடிக்கிறேன்...
என்னைப் புரிந்துகொண்டோர்
மிகச் சிலர்
புரியாதவர்கள் பிரயத்தனப்பட்டு
என்னைக்
காயப்படுத்த வேண்டாம்
காயக்கிடக்கும் காயங்களுக்கு
தண்ணீர் ஊற்றிச் செல்லவேண்டாம்...

Jul 27, 2009

உன் பெயரே என் பெயராய்



ஒவ்வொரு முறை கையெழுத்திடும் போதும்
கடைசிப் புள்ளியில் ஒரு நிமிடம்
தயங்கி நிற்கிறேன்
உன் பெயரையும் பின்னோடு எழுதிடும்
ஆவலுடன்..

Jun 20, 2009

கண்ணோடு கனாக்காலம்


உன்னைப் பற்றிய கனவுகள் மட்டும்
கலர்ப்படம் காட்டுகின்றன...
செக்கர் வானமாய் சிவந்து விடுகின்றன
கன்னங்கள்....

அழகான எல்லாவற்றையும் பதிவு செய்கிறேன்
உனக்காக...
உன்னிடம் கூறுவதற்காக...
தெருவில் விளையாடும்
புசுபுசு நாயக்குட்டியிலிருந்து
புதிதாய்க் கேட்ட பாடலின் வரிகள் வரை....
ஆனால் உன்னிடம் பேசும்போது மட்டும்
பேச்சிழந்து தவிக்கிறேன்...

குரங்கு தானடா நீ...
உன்னைப் பற்றி நினைப்பதை
பிடிவாதமாய் நிறுத்தினாலும்
தாவி வந்து மனதுள்
சிம்மாசனம் கொண்டுவிடுகிறாய்...

இனிய இம்சை தான்
நெஞ்சம் முழுக்க
உன் நினைவுகளும்
கண்களில் தேக்கி வைத்த
கனவுகளும்
உதடுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்
பாடல்களும்
விரல் வழி கசிந்து வரும்
கவிதை வரிகளும்

காலங்கள் தாண்டியும்
காத்திருப்பேன் உனக்காய்...

May 27, 2009

என்னை மிகவும் சிந்திக்க வைத்த கேள்வி


தலைப்பை படிச்சதும் என்னவோ ஏதோனு நினைச்சுடதிங்க....
ரொம்ப சில்லியான கேள்வியத்தான் கேட்க போறேன்...
ரெண்டு நாள் முன்னாடி என் கதைல எழுதின மாதிரியே மெரினா கடற்கரைப் பேருந்து நிலையத்திலிருந்து அடையார் வரைக்கும் பல்லவன் தாழ் தள சொகுசுப் பேருந்தில் என் கதையைப் பற்றி சிந்தித்துக்கொண்டே பயணம் செய்துகொண்டிருந்தேன்...
திடீரென்று ஒரு வித்தியாசமான கேள்வி எனக்குள்... கதைல எழுதின மாதிரி பேருந்துக்கு யாராவது தீ வெச்சா எப்படி தப்பிக்கிறதுன்னு... எனக்கு ஏதோ ஆயிடுச்சுன்னு நினைச்சுக்காதிங்க...
பேருந்தை நோட்டம் விட்டதில் எளிதில் தப்பிப்பதற்கான வழிகளே இல்லாதது போல தோன்றியது... ஏனென்றால் தாழ் தள சொகுசு பேருந்தில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டிருக்கும்... சன்னல் வழியா தப்பிக்கிறதும் கொஞ்சம் சிரமமான காரியம்... எனக்கு இதுல இருக்குற டெக்னிகலான விஷயங்கள் எதுவும் தெரியாது... ரெண்டு நாலா மண்டைய குடைஞ்சுட்டு இருந்த கேள்வி இது... நம்ம நண்பர்கள்கிட்ட கிடைக்காத பதிலா??? அதான் இதை எழுதிட்டேன்... இப்படி ஒரு கேள்விய கேட்டதுக்காக பெரிய மனசு பண்ணி என்ன மன்னிச்சுட்டு கொஞ்சம் விளக்கம் குடுங்களேன் ப்ளீஸ்

Apr 22, 2009

உன் பயணங்களில் என் சுவடுகள்....


சென்னைப் பட்டணம்
சென்னை வாழ் மக்கள் எல்லோரும் தம் வாழ்வின் ஒரு பகுதியைப் பேருந்து பயணத்தில் கழித்து இருப்பார்கள்.... காலையில் எழுந்து அவசர அவசரமாய்க் கிளம்பி சாப்பிட்டும் சாப்பிடாமல், அலுவலகமோ கல்லூரியோ ஒரு மணி நேரத்திற்கு முன்னால் சென்று நிற்கும் இடம் பேருந்து நிறுத்தம்... பிடிக்கிறதோ இல்லையோ... வேறு வழி இல்லாமல் பயணிப்பவர் எத்தனையோ பேர்.... ஆனால் எனக்கு????? என் உறவாய், என் நண்பனாய் மாறிப்போனவன் இந்த பல்லவன்....
மெரீனா கடற்கரைப் பேருந்து நிலையத்தில் ஏறி ஒரு மணி நேரம் பயணிக்கும் எனக்கு சென்னையில் பிடித்ததே பேருந்துப்பயணம் மட்டும்தான். இவ ரொம்ப ஓவரா சுத்துறான்னு நினைக்காதீங்க .... உண்மைதான்... எனக்கும் சில நேரங்கள்ல பிடிக்காம போய் இருக்கு... நம்ம நெருங்கின தோழன்கூட நாம சண்டை போட மாட்டோமா??? அப்படித்தான் இதுவும்.... சன்னலோரமாய் அமர்ந்து ஆர்ப்பரிக்கும் கடலை ரசித்தபடியே கல்லூரிக்குச் சென்ற நாட்கள் எல்லாம் எனக்கு இனிய நாட்களே...
எனக்கு ஏன் இந்த பல்லவனை இவ்வளவு பிடிக்கும் தெரியுமா? சன்னல் கம்பிகளை அவன் தோளாய் நினைத்துக்கொண்டு எந்தப் பிரச்சினையைப் பகிர்ந்து கொண்டாலும் மறுத்துப் பேசாமல் என் தலை வருடி ஆதரிக்கும் நண்பன்.. எங்களுக்குள் மௌனம் மட்டுமே மொழியாய் இருந்தது.... கூட்ட நெரிசலில் முட்டி மோதிக்கொண்டு இருந்தாலும்... எங்களுக்கான சம்பாஷனைகள் மட்டும் ஓய்ந்ததே இல்லை... செப்டம்பர் மாத சந்தியா காலங்களில் சிலு சிலுவென வீசும் வாடைக் காற்றும் சிறு மழைத் தூறல்களும் என் பயணத்தில் மழைக்கால சக பயணிகள்.. எத்தனையோ மக்கள்... பாரி முனையிலிருந்து பூ வாங்கிக்கொண்டு வழி நெடுக பூக்கட்டும் பூக்காரக் கிழவி, அலைபேசியோடு ஒட்டிப்பிறந்தவள் போல் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் கல்லூரி மாணவி, மாணவிகளைக் கிண்டலடித்துக்கொண்டும் பாட்டு பாடிக்கொண்டும் பயணிக்கும் கல்லூரி மாணவர்கள், வயிற்றுப்பிள்ளைத்தாச்சி, குடிகாரக்கிழவன், சின்னஞ்சிறு சுட்டிகள், வேலைக்குச்செல்லும் பெண்கள், இப்படி எத்தனையோ கதாபாத்திரங்களை சுமந்துகொண்டு என் நண்பனும்... இவர்கள் எல்லோரையும் பார்த்துக்கொண்டு, இவர்களுள் எதையோ தேடிக்கொண்டு நானும்....
திடீரென்று ஒருநாள் என்னைப் பிடித்திருக்கிறது என்றும், ஜாதகம் பொருந்தி இருக்கிறது என்றும் கூறி ஒரு குடும்பம் என்னைப் பெண் பார்க்க வருவதாய் ஒரு தகவல்... இதை ஏற்பதா வேண்டாமா என்ற குழப்பத்துடனே வீட்டிற்குள் நுழைந்தேன்... அங்கே நடுநாயகமாக இந்த வைபவத்துக்கு நாயகனாக உட்கார்ந்திருந்தான் என் வில்லன்.. அவன் வேறு யாருமல்ல.. சரியாக நான்கு நாட்களுக்கு முன்னால் அதே பல்லவனில் ஒரு பெண்ணை அருவருக்கத்தக்க வகையில் சீண்டி அவள் கையால் செருப்படி வாங்கிய அதே கண்ணியவான்...
வெறும் XY FACTORகளுக்கு மதிப்பு கொடுக்கும் இவனிடமா என் மெல்லிய உணர்வுகளுக்கு அங்கீகாரம் கிடைக்கப்போகிறது???? அப்பாவிடம் விசயத்தைக் கூறி அவர்களை வீட்டைவிட்டு அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது....
என்னைக் காப்பாற்றிவிட்டான் என் பல்லவன்.
இப்படி என் வாழ்க்கை முழுவதும் என் துணைவனாய் வந்த உற்ற தோழன்தான் இன்று ஏதோ அரசியல் காரணங்களுக்காக எரிக்கப்பட்டு எரிந்துகொண்டிருக்கிறான்... அவனுள் நானும் எரிந்துகொண்டிருக்கின்றேன். நாங்கள் இருவரும் காதலர்கள் அல்ல.. அப்படியே காதலித்திருந்தாலும், எங்கள் காதலுக்கு எதிர்ப்புகளும் இல்லை.. ஆனால் தனிமனித சுயநலத்துகாக ஒன்றாய் எரிக்கப்பட்டு இன்று மீளாத் துயிலில்....
எங்கள் கல்லறைகள் வேறு வேறாய் இருப்பினும் எங்கள் ஜீவன் ஒன்றாய் நித்திரரைக்குள் ஆழ்ந்துவிட்டது.

Mar 24, 2009

தேர்தல் வந்தாச்சு.....


இங்கே பெயரளவில் மட்டுமே
குடியரசு......
தனிமனித சுதந்திரமும்
அடிப்படை உரிமைகளும்
கூறுபோட்டு விற்கப்படுகின்றன....
ஒரு ஓட்டு ரூபாய் 1000/-
இலவச இணைப்பாக
பிரியாணிப் பொட்டலம்....
முன் பதிவிற்கு
இப்போதே முந்துங்கள்....


Mar 16, 2009

புத்தம் வளர்த்த பூமி


புத்தம் வளர்த்த பூமி
இன்று
யுத்தக்களமாய் மாறி
இரத்தக்காவு வாங்கிக் கொண்டிருக்கிறது

சாவிற்கு ஒத்திகை பார்க்க
பதுங்கு குழிகள் மேடைகளாகின்றன...

சுதந்திர நாடுகளில்
தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு மட்டுமே
குடியுரிமை......

செத்துப் போனத் தமிழனைக் காட்டி
உண்ணா விரத நாடகம் நடத்தி
தனக்குத்தானே உதவித்தொகையும்
அடுத்த வேலை சாப்பாட்டிற்கு
பிரியாணிப் பொட்டலம் சம்பாதித்துக்கொள்ளும்
எடுபிடி கட்சிக்காரர்கள்

கரன்சி நோட்டு வாசத்தையே
ஆக்சிஜனாய் சுவாசித்து வந்த
நம்மூர் அரசியல்வியாதிகள்
இப்போதெல்லாம் அவற்றை
தமிழனின் இரத்தத்தில் தோய்த்தெடுத்து
தின்று கொழுக்கிறார்கள்

இருக்காதா பின்னே
தமிழனின் இரத்தத்தில்
உப்பும் காரமும்
கூடுதல் அல்லவோ....

மனிதன் வாழ வழி காட்டத் தெரியாத
அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிடவும்
ஊரெங்கும் போஸ்டர் ஒட்டுவதற்கும்
வெட்கமாயில்லை..........

அங்கே...
அழிந்து கொண்டிருக்கும்
ஒரு சமூகம்....
இங்கே....
மானும் மயிலும் கட்டிப்பிடித்து
ஆடுவதைக் கைதட்டி ரசிக்கும்
ரோஷமில்லா ஆட்டு மந்தைகள்...

அங்கே...
தமிழ்த்தாய் ஒருத்தி
மானபங்கப் படுத்தப்படுகிறாள்
இங்கே...
நமக்கு மகளிர் தினம்
ஒரு கேடு...

மனிதா....
கொஞ்சம் யோசித்துப்பார்...
அடுத்த வீட்டில் எரியும் தீ
உன் வீட்டை எரிக்க
எத்தனை நேரம் ஆகும்????

ஒவ்வொரு தமிழனும்
தன்னிலை உணரும் வரை
இந்த அவல நிலை
மாறப்போவதுமில்லை ...
கதர்ச்சட்டைகளும் கரை வேட்டிகளும்
மாறவிடப்போவதும் இல்லை......

Mar 1, 2009

பெண்மை




இன்று ஒருவன்
நாளை மற்றொருவன்...
உரிமை கொஞ்சம் குறைந்தாலும்
குரல் கொடுப்பவர்களெல்லாம்
சத்தமின்றி விற்கிறார்கள்
பெண்மையை............

மூடநம்பிக்கை


விதவை எதிரே வந்தால்
போன காரியம் கெட்டுவிடுமாம்
பூனை குறுக்கே வந்தால்
அபசகுணமாம்.....
மூடநம்பிக்கையின் பிடியில்
குண்டுச்சட்டிக்குள் குதிரை ஒட்டுபவனே...
ஒரு நாள் நன்றாகக்
கண்ணாடியைப் பார்த்துவிட்டு போ...
என்ன நிச்சயம்...
மறுநாள் நீ உயிருடன் இருப்பாய் என்று????

Jan 15, 2009

பொங்கலோ பொங்கல்


பச்சைப் பாவாடைக் கட்டி
புதுப் பொண்ணா பூத்து நின்னா...
தை மாச அறுவடைக்கு
நெல்லு நெல்லா காய்ச்சு நின்னா
என் உசிருக்கு உசிரான
பூமித் தாயி...

பழசையெல்லாம் கழிச்சுப்போட்டு
வீட்டுக்கு வெள்ளை அடிச்சு
காத்திருந்தோம் மாசப் பொறப்புக்கு..

வாசல் மறைக்க
மாக்கோலம் போட்டு
மாடு கன்னுக்கு
அலங்காரம் பண்ணி
அறுவடை செஞ்ச
புது நெல்லை
புடைச்சு வச்சோம்...

புதுப் பானையில
பொங்கல் வச்சு
பொங்கலோ பொங்கல் பாடி
கோமாதாவுக்கு படையல் வச்சு
செங்கரும்பு வெட்டித் தின்னோம்...

பட்டு பாவடை சட்டை போட்டு
ரெட்டை சடை நிறைய
பூ முடிச்சு
கையில கரும்ப வச்சுகிட்டு
இளசுகளா
ஊர் பூரா சுத்தி வந்தோம்...


என் தாத்தன்
எனக்காக கட்டி வச்ச
ஊஞ்சலுக்கு போட்டி போட்டு
நாள் பூரா ஆடி களிச்சோம்...

பெருசா வெள்ளை வேட்டிய
ஊர் மந்தைக்கு நடுவுல கட்டி
விடிய விடிய தூங்கி விழுந்து
படகோட்டி படம் பார்த்தோம்...

ஓட்டப் பந்தையத்திலிருந்து
மாறுவேசப் போட்டி வரைக்கும்
எதுலையுமே கலந்துக்காம
ஓரமா நின்னு
கேலி செஞ்சு வெளையாடினோம்...

பழையன கழிஞ்சு
புதியன புகுதல் போல
இன்னைக்கு அந்த சந்தோஷம் எல்லாம்
மறஞ்சு போச்சு
பழக்கவழக்கம் மாறிப்போச்சு..

ஸ்டிக்கர் கோலம் ஒட்டி வெச்சு...
குக்கர் விசிலுக்கு
பொங்கலோ பொங்கல் பாடி
நாள் பூரா டிவி பார்த்து
நலிஞ்சு போச்சு நம்ம சனம்...

என் பூமித் தாயி மேல
அடுக்கடுக்கா வீடு கட்டி
பாரம் ஏத்தி வச்சிருக்கான்
இந்தப் பாவி மனுசப் பய...

நெல்லுக்குத் தண்ணி இல்லாம
அறுவடைக்கும் காசு இல்லாம
பொங்கித் தின்ன சோறு இல்லாம
ஏங்கிக் கிடக்கறான்
என் குடியானவன்...

எல்லா சனமும்
நல்லா வாழ
சந்தோசம் பொங்கி வழிய
நான் பாடுறேன்
பொங்கலோ பொங்கல்...

சிங்காரச் சென்னை...


சிங்காரச் சென்னை...
நடு ரோட்டில் எச்சில் துப்பும்
நவ நாகரிக சமூகமும்
சட்டசபைக் குறிப்பிலிருந்து
நீக்கப்பட்ட வார்த்தைகளும்...
சேலை கட்டியிருந்தால்
போதுமென உரசிப்பார்க்கும்
பத்தரைமாற்றுத் தங்கங்களும்...
பணம் எந்த வழியில்
வந்தால் என்ன
என் கைக்கு வந்தால் போதும்
என நினைக்கும் முதலைகளும்
நிறைந்த அழகான ஊர்...
சிங்காரச் சென்னை...

Jan 11, 2009

சுமைதாங்கிக்கல்


தோற்பதர்க்க்காகவே நான்
என்னைத் தோற்கடிக்க
எத்தனையோ விஷயங்கள்...

வறண்டு போய்க் கிடந்த
என் இதயத்தில்
உன் நினைவுகளும் என் அழுகைகளும்
பாரம் ஏற்றிவிட்டன..

வெளியே சொன்னால்
அந்த வார்த்தைகளும்
பாரம் சேர்த்துவிடுமோ
என பயப்பட்டுக்கொண்டே
அமைதி காக்கிறேன்

சொல்ல வரும் பொது
உன் அமைதி என்னைத் தடுக்கிறது
நீ பேசும் பொது
இந்த நிலையாவது தொடரட்டும்
என நான் அடங்கிவிடுகிறேன்...


இந்த நினைவுகளைக்
களையாய் எண்ணி
கிள்ளி எறிகிறேன்
ஆனால் விருட்சமாய் வளர்கிறது...

உன்னை என்னிடம் சேர்க்கச் சொல்லி
இருக்கும் கடவுளிடம் எல்லாம் வேண்டுகிறேன்...
இப்போது மட்டும்
முகவரி தெரிந்ததா...?
என்று எள்ளி நகையாடுகின்றன...

இவற்றை வெறும் ஈர்ப்பு என்று
கூறிவிடாதே..
கருகிப்போய்விடும் என் இதயம்...
சாம்பலில் கூட
உன் நினைவுகளின் வாசம்...

முதல் நாள் பள்ளியில்
அப்பா எப்போ வருவார்
எனக் காத்திருக்கும்
குழந்தையாய்
உனக்காக நிதமும்
காத்துக்கொண்டிருக்கிறேன்...

பிறவாத கருவுக்கு மட்டும் இல்லை
சொல்லாத காதலுக்கும்
ஒரு நினைவுச் சின்னமாய்
சுமைதாங்கிக்கல்
எங்கோ இருந்து
கரிசனமாய் ஒரு பார்வை பார்த்தது...

Jan 8, 2009

மண் வாசம்


கயிற்றுக்கட்டிலில் படுத்துறங்கி
வேப்பங்குச்சியில் பல்துலக்கி
கம்மங்கூழ் குடித்து
கிணத்துப் படிக்கட்டில்
தண்ணீர் மொண்டு குளித்து
புளியமரத்தடியில் சொக்கட்டான் ஆடி
திருட்டு மாங்காய் அடித்து
ஆடு மேய்த்து
ஊர் மந்தையில் சடுகுடு ஜெயித்து
புழுதியோடு புழுதியாய்
உருண்டு பிறண்டு
கூட்டாஞ்சோறும் பிள்ளைப் பொங்கலும் கொண்டாடி
தாத்தன் கை பிடித்து
மரம் நட்டு தண்ணீர் ஊற்றி வளரத்(ந்)த சுகம்
இன்று...
இட்லி தோசை எல்லாம் மாறி
பிட்ஸா என்று ஒன்றைத் தின்று
காக்காய் குளியல் குளித்து
காசு சம்பாதிக்கும்
இயந்திரமாய் மாறிப்போன வாழ்வில்
எட்டாக்கனியாயும் பகல் கனவாகவும்
என் முன்னால் கொக்காணி காட்டி சிரிக்கின்றன
என்ன சாதித்தாய் என்று

பத்திரிகைச் சுதந்திரம்


கத்தி முனையை விட
பேனா முனை கூர்மையானதாம்
சொன்னான் ஒரு பைத்தியக்காரன்...
இன்று பேனா முனைகளால்
கிழித்தெரியப்படும் உண்மைகளெல்லாம்
தம் கத்தி முனைகளால்
பேனாக்களை காவு
வாங்கிக்கொண்டிருகின்றன...