"பெண்மைஎனப்படுவது யாதெனின்?" என்று
இலக்கணச் சுவர் கட்டி
புணர்ச்சி விதிகள் கற்பித்த
அந்த வெற்றுவெளி
இருட்டுக்கல்லறைக்குள்
உணர்சிகள் பல
ஊமை கண்மொழியென
ஒலியாக்கம் பெறாமல்
ஊர் மொத்தமும்
அக்கல்லறை வாசலில்
"இந்த எழுத்துக்கள்
பெண்பாலாதலின் காறி உமிழப்படும்"
என வாசகத்தட்டிகள் ஏந்தி நிற்க
பிணந்தின்னிக் கழுகுகளின்
இரத்தம் சொட்டும்
நகங்களுக்கு பயந்தே
என் பெண்ணியம்
உணர்ச்சி மரத்த உடலாய்
இருட்டு மூலைக்குள்
அண்டிக்கிடக்கிறது...
எனக்கும் முன்னே
அடுக்கடுக்காய் பிணங்கள்..
அழுகிக்கொண்டிருக்கும்
சதைப்பிண்டங்கள்
வாடை வீசக்கூடத்தயங்குகின்றன
ஆயிரம் பட்டங்கள்
அசிங்கமாய் வந்து சேருமென...
எங்கேனும் கண்டதுண்டா
பெட்டை இனத்திற்கென
இத்தனைப் பெயர்சூட்டல்கள்??
கடைசியாய் ஓர் எச்சரிக்கை
ஆண்களே!!!
பெண்ணியப்பகுத்தறிவு எதிர்த்திடுங்கள்
இல்லையேல் பெண்ணின் பெயரால்
மனிதச்சந்தையில்
கூவியழைக்கப்படுவீர்கள்...