விடியாமல் இரவு
நீண்டபடி இருக்கட்டும்
கண்ணீர் தாரைகள்
காயுமட்டும்..
காற்றை அடைத்து
இழுத்து முடிச்சிட்ட பலூனாய்
வெடித்துச் சிதற
சகுனம் நோக்கி இதயம்..
தன்னை இழந்து
ஆழப் புதைந்து
இருப்பை மறைத்து
ஒளிந்து கொள்ளும் சுயம்..
வஞ்சித்தே வைத்திருக்கிறது
கானல் நீராய்
அக்களிப்பு காட்டும்
வாழ்க்கை..
நடிக்கவேனும்
பழகியிருக்கிறேன்
சிரித்துக் கொண்டே இருப்பதற்கு..
இரவுகளேனும்
இடைவெளி
வாங்கிக்கொள்ளட்டும்
ஆற்றாமைகளை
அழுதுகரைக்க..