Aug 20, 2009

உள்ளுறையும் கடல்

அனுப்பப்படாத குறுஞ்செய்திகளால்
நிரம்பிக்கிடக்கிறது அலைபேசி
எழுதித் தீராத சொற்களுக்காகக்
காத்திருக்கின்றன மின்னஞ்சல்கள்
உலர்ந்து போன
முடிக்கப்படாத கவிதைகள்
கொட்டப்படாத உணர்வுகளோடு
அழுத்திக்கொண்டிருக்கும் பிரியம்
வதை முகாமென அதீதமாய் இம்சிக்கிறது
பசுவின் வலி காக்கைக்குப்
புரிய நியாயமில்லை

சின்ன சின்ன சீண்டல்களுக்கும்
செல்ல ஊடல்களுக்குமான
ஏக்கங்களையும்
வெளிப்படுத்தப்படாத
உணர்வுகளையும் ஆழ
புதைத்து வைத்திருக்கிறேன்...
இஷ்டப்பட்டு கஷ்டப்படுகிறேன்
எரிமலை வெடிந்து கசிந்துவிடாமல்
கண்ணீரை உள்ளிழுத்து
மௌனம் காக்கிறேன்
கொஞ்சம் கொஞ்சமாய்
வசம் இழந்துகொண்டிருக்கிறேன்...

என் நினைவுகள்
உனக்கு மட்டுமல்ல
எனக்குமே வருவதில்லை...
உன் காலடி வரை வந்து
ஸ்பரிசிக்காமலே திரும்பிவிடுகின்றன
உனக்கான என் பிரியங்கள்
உன் நினைவுகள் தூரத்தில்
ரயில் தண்டவாளத்தின் அதிர்வுகளாய்
நிம்மதியிழக்கச் செய்கிறது
எப்போதும் என்னை....

உன் ஒற்றைச் சொல்லை தலையசைப்பை
புன்னகையை எதிர்நோக்கியே
என் நாட்கள் விடி(மடி)கின்றன...
விடிகின்ற பொழுதுக்காய்
விழிதிறந்தே காத்திருக்கிறேன்...
விடியலின் வெளிச்சமுமென்னை
பரிகசித்துப் போகிறது.

Aug 13, 2009

வலி


வலிகளின்றி வாழ்க்கை இல்லை...
நான்...
வலிகளை ம(றை)றக்கத் தெரிந்தவள்...
அடக்கக் கற்றுக்கொண்ட கோபங்களுக்கு
ஒரே வடிகாலாய் என் கண்கள்...
வெடிக்க நினைக்கும்போதே
ஊமையாய்க் கரைந்துவிடும்...
மறுக்கப்பட்ட கனவுகளோடும்
நிராகரிக்கப்பட்ட விருப்பங்களோடும்
புன்னகையோடு வாழப் பழகியவள்...
இழக்க விரும்பா
குழந்தைத்தனத்தோடு
வாழ்கையை முழுமையாய்
வாழ்ந்திடத் துடிக்கிறேன்...
என்னைப் புரிந்துகொண்டோர்
மிகச் சிலர்
புரியாதவர்கள் பிரயத்தனப்பட்டு
என்னைக்
காயப்படுத்த வேண்டாம்
காயக்கிடக்கும் காயங்களுக்கு
தண்ணீர் ஊற்றிச் செல்லவேண்டாம்...