Jun 20, 2009

கண்ணோடு கனாக்காலம்


உன்னைப் பற்றிய கனவுகள் மட்டும்
கலர்ப்படம் காட்டுகின்றன...
செக்கர் வானமாய் சிவந்து விடுகின்றன
கன்னங்கள்....

அழகான எல்லாவற்றையும் பதிவு செய்கிறேன்
உனக்காக...
உன்னிடம் கூறுவதற்காக...
தெருவில் விளையாடும்
புசுபுசு நாயக்குட்டியிலிருந்து
புதிதாய்க் கேட்ட பாடலின் வரிகள் வரை....
ஆனால் உன்னிடம் பேசும்போது மட்டும்
பேச்சிழந்து தவிக்கிறேன்...

குரங்கு தானடா நீ...
உன்னைப் பற்றி நினைப்பதை
பிடிவாதமாய் நிறுத்தினாலும்
தாவி வந்து மனதுள்
சிம்மாசனம் கொண்டுவிடுகிறாய்...

இனிய இம்சை தான்
நெஞ்சம் முழுக்க
உன் நினைவுகளும்
கண்களில் தேக்கி வைத்த
கனவுகளும்
உதடுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்
பாடல்களும்
விரல் வழி கசிந்து வரும்
கவிதை வரிகளும்

காலங்கள் தாண்டியும்
காத்திருப்பேன் உனக்காய்...