Dec 16, 2011

பெண்ணின் பெயரால் !!!!

"பெண்மைஎனப்படுவது யாதெனின்?" என்று 
இலக்கணச் சுவர் கட்டி 
புணர்ச்சி விதிகள் கற்பித்த   
அந்த வெற்றுவெளி 
இருட்டுக்கல்லறைக்குள் 
உணர்சிகள் பல  
ஊமை கண்மொழியென
ஒலியாக்கம் பெறாமல் 

ஊர் மொத்தமும்
ஒன்றுகூடி 
அக்கல்லறை வாசலில் 
"இந்த  எழுத்துக்கள் 
பெண்பாலாதலின் காறி உமிழப்படும்" 
என வாசகத்தட்டிகள் ஏந்தி நிற்க 

பிணந்தின்னிக் கழுகுகளின் 
இரத்தம் சொட்டும் 
நகங்களுக்கு பயந்தே 
என் பெண்ணியம் 
உணர்ச்சி மரத்த உடலாய்
இருட்டு மூலைக்குள் 
அண்டிக்கிடக்கிறது... 

எனக்கும் முன்னே 
அடுக்கடுக்காய் பிணங்கள்.. 
அழுகிக்கொண்டிருக்கும் 
சதைப்பிண்டங்கள் 
வாடை வீசக்கூடத்தயங்குகின்றன
ஆயிரம் பட்டங்கள் 
அசிங்கமாய் வந்து சேருமென... 

எங்கேனும் கண்டதுண்டா 
பெட்டை இனத்திற்கென 
இத்தனைப் பெயர்சூட்டல்கள்?? 

கடைசியாய் ஓர் எச்சரிக்கை 
ஆண்களே!!!
பெண்ணியப்பகுத்தறிவு எதிர்த்திடுங்கள் 
இல்லையேல் பெண்ணின் பெயரால் 
மனிதச்சந்தையில் 
கூவியழைக்கப்படுவீர்கள்... 


Dec 6, 2011

தனிப்பறவை


இனம்புரியா உணர்வுகளின் 
மேகக்கூட்டம்
எப்போதும் மனதுள்
மூட்டமிட்டுக்கொண்டே..

அதிகபட்ச சோகத்தின் வெளிப்பாடாய்
சந்தோஷமும்...
அதிகபட்ச சந்தோஷத்தின் வெளிப்பாடாய்
சோகமும்...
பிரம்மாண்ட கோபுரத்தின்
நிழலாய் மாறி
என்னை அழுத்திக்கொண்டிருக்க...

மழை விட்டுச்சென்ற
இளம் ஈரமும்..
இலையுதிர் கால
மரங்களை நீங்கிய
காய்ந்த இலைகளும்...
இன்னும் கொஞ்சம்
இன்னும் கொஞ்சமேன
என்னுள் பாரமேற்றியபடி...

சிறுசிறு ஆசைகளும்  
ஏக்கங்களும் சேர்த்து வார்க்கப்பட்ட 
கனவுக்கூட்டில் 
ஆங்காங்கே சில கயிறுகள்
அறுந்து விழுவதுபோல் 

காற்றின் திசையில் 
ஒரு தனிப்பறவை..
எனக்கென மட்டும் 
பல கதைகள் கூறிச்செல்வதாய் 

என் தனிமைப் பயணங்களில் 
ஏதோ ஒன்று 
ஏதுமற்ற வெற்றுவெளியில் 
முடிந்துவிடுவதாய் 
இப்படி.. 
எண்ணற்ற பிரமைகளின் 
பிரம்மாவாய் என் மனம் 
புரிதலும் 
புரிதல் நிமித்தமும் 
என்ற போராட்டம் நடத்தி 
மாநாடு போட்டு.. 
ஒன்றும் புரியாமல் மீண்டும் 
குழப்பத்திலடங்கி

எதற்குமே விளக்கம் 
கிடைக்காவிடினும் 
என் மனம் 
ஒற்றை நொடி தள்ளி நின்று 
ரசித்துக்கொண்டுதான் இருக்கிறது.. 

என்னையும் 

என் எண்ணங்களின் நீட்சியையும்!!!!