Dec 15, 2010

மீண்டும் வருகிறேன்

உட்சூழல் வெற்றிடமாய்..
வெளிச்சூழல் வேற்றிடமாய்..
தமிழ்ச்சூழல் தேடி 
எழுதாகவிதைக்கு 
சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு 
மீண்டும்.....

பாரதியையும் பாவேந்தனையும்
பாட்டுடைத்தலைவனாய் 
பாடிய கவியனைத்தும்
காணாமற் போனதுபோல்...
என் தமிழும் எனைவிட்டு
கொஞ்சம் கொஞ்சமாய்....

எழுதியெழுதி கிழித்துப்போட்ட 
காகிதங்களில் 
ஒன்றிரண்டு மிஞ்சியிருப்பினும்
என் தமிழ் எனைவிட்டு
போகாதிருந்திருக்கும்...

உகரம் இகரம் 
குறுக்கம் எச்சம் 
அணி, விகுதி 
யாப்பு அலங்காரம் என 
இலக்கணம் மொத்தமாய் 
மறந்துபோய்...
மூளை மரித்துப்போன முடமாய்....

தாய் தனிமை
காதல் காமம்
கல்லறை கருவறை என 
பாடுபொருள் எத்தனையிருப்பினும்...
மரத்துப்போய்க் கிடக்கும் 
மூளைக்குள் 
வார்த்தைகள் தேடியே 
காகிதங்கள் வெறுமையாய்... 
முடிக்கத்தெரியாமல் 
ஆரம்பித்தேனோ???
மீண்டும் ஒரு 
கிழிந்து போகும்
கவிதைக்கு இடமில்லை...

மழுங்கிப்போன மூளையோடு
மீண்டும் 'அ' னா 'ஆ' வன்னா 
பழக வருகிறேன்...