Dec 15, 2010

மீண்டும் வருகிறேன்

உட்சூழல் வெற்றிடமாய்..
வெளிச்சூழல் வேற்றிடமாய்..
தமிழ்ச்சூழல் தேடி 
எழுதாகவிதைக்கு 
சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு 
மீண்டும்.....

பாரதியையும் பாவேந்தனையும்
பாட்டுடைத்தலைவனாய் 
பாடிய கவியனைத்தும்
காணாமற் போனதுபோல்...
என் தமிழும் எனைவிட்டு
கொஞ்சம் கொஞ்சமாய்....

எழுதியெழுதி கிழித்துப்போட்ட 
காகிதங்களில் 
ஒன்றிரண்டு மிஞ்சியிருப்பினும்
என் தமிழ் எனைவிட்டு
போகாதிருந்திருக்கும்...

உகரம் இகரம் 
குறுக்கம் எச்சம் 
அணி, விகுதி 
யாப்பு அலங்காரம் என 
இலக்கணம் மொத்தமாய் 
மறந்துபோய்...
மூளை மரித்துப்போன முடமாய்....

தாய் தனிமை
காதல் காமம்
கல்லறை கருவறை என 
பாடுபொருள் எத்தனையிருப்பினும்...
மரத்துப்போய்க் கிடக்கும் 
மூளைக்குள் 
வார்த்தைகள் தேடியே 
காகிதங்கள் வெறுமையாய்... 
முடிக்கத்தெரியாமல் 
ஆரம்பித்தேனோ???
மீண்டும் ஒரு 
கிழிந்து போகும்
கவிதைக்கு இடமில்லை...

மழுங்கிப்போன மூளையோடு
மீண்டும் 'அ' னா 'ஆ' வன்னா 
பழக வருகிறேன்...  

Feb 23, 2010

நினைவுகளுக்கு மௌனாஞ்சலி


கடந்த காலத்திற்குள்
தொலைந்து போன நினைவுகளைத் தேடியே
பேருந்து பயணங்கள் அனைத்தும்....
அலுத்துப் போன இயந்திர வாழ்வில்
ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்து போகின்றன
கடந்த காலத்தின் நினைவுகளும்
அதில் நிறைந்திருந்த குழந்தைத்தனமும்....
சுருங்கிப்போன நாட்களால்
ஏதோ ஒரு பேருந்து பயணத்தில்..
எழுதப்படாத நாட்குறிப்புகளுக்குள்
சில நிகழ்வுகள் மட்டும் கைகாட்டி செல்கின்றன...
பெயர் மறந்து போன
பால்ய கால நண்பனும்
அவனது கலர் கலர் சிலேட்டு குச்சிகளும்...
நீச்சல் கற்றுக்கொள்ள சென்ற கிணறும்
அன்றோடு முடிந்துபோன என் நீச்சலடிக்கும் ஆசையும்...
பங்காளித் தகராறுகளுக்கு பயந்துபோய்
வீட்டிற்குள் ஒளிந்து கிடந்த இருட்டு மூலையும்..
சாக்லேட்டு முதல் ஸ்கர்ட்டு போட்ட பொம்மை வரை
வாசலில் வரைந்து வைத்த தைப்பொங்கல் அதிகாலையும்...
பக்கத்து வீட்டு தோழிகளோடு போட்டி போட்டு
சேர்த்து வைத்த ஸ்டிக்கர் பொட்டு அட்டைகளும்...
காரணமே இல்லாமல் போட்ட சண்டைகளும்...
மாறிப்போன நண்பர்களும்...
சிறுபிள்ளைத்தனத்தின் அடையாளமாய்
இன்றும் நினைத்து அசடு வழியும் சம்பவங்களும்...
காணாமல் போன வாழ்த்து அட்டைகளும்...
மாற்றலாகிப்போன நண்பர்களும்....
மறந்துபோன எத்தனையோ நிகழ்வுகளோடு...
நாளை மறக்கப்பட காத்திருக்கும் நிகழ்வுகள்....
பின்னோக்கி செல்லும் சாலையோர மரங்களோடு...
என் நினைவுகளும்....
ஒன்றோடொன்று தொடர்பில்லாமல்...
ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்து...
இறந்த காலத்திற்கு
மௌன அஞ்சலி செலுத்திச் செல்கின்றன...