Aug 15, 2023

வானம் பொய்க்குமா?

 தாமரை இலை மேல் படர்ந்த

ஒற்றைப் பெருந்துளி நீரில்

சிறைப்பட்ட மீன்குஞ்சாக நான்..


சுற்றுச்சுவர் சுருங்கி

நெருக்கிக் கொண்டே வருகிறது

அகோரமாக ஓலமிடுகிறது மனம்..

மறந்தும் ஒரு முனகல் சத்தம் வெளிவரவில்லை.


மழைக்காக காத்துக்கொண்டே இருக்கிறேன்

வெளுத்துப் போய் காண்கிறது 

வானம்!


வானம் பொய்க்குமா?


Jul 8, 2023

வரம்

 அதீத வெறுப்பையும்

ஆழமான நேசத்தையும்

நிமிடத்திற்கு ஒன்றாய்

மாறி மாறி

உணரச் செய்கிறாய்..


நாட்களின் முடிவில்

துலாபாரம்

உன்னிடமே

கணத்துக் கிடக்கிறது!!


எனக்கான வரத்தையும்

உனக்கான சாபத்தையும்

சேர்த்தே தருகிறேன்


பிழைத்துப் போ!

அடுத்த ஜென்மத்திலும்

என்னவனாக

பிறக்கக் கடவது!!


May 17, 2023

இரவின் காதலி-6

 தூக்கம் தொலைத்த இரவில்

ஏதோ ஒரு மூலையில்

முடிவின்றி நீளும்

இருண்ட முடிவிலியில்

கவனம் நிலைத்து நின்றபடி


நினைவுகள் தொடரவில்லை

தேடல்கள் எதுவுமில்லை

அழுத்திக்கொண்டிருக்கும்

ஏதோ ஒன்றின்

எடை மட்டும் கூடியபடி


வெளிவர மனமே இன்றி

விரும்பி தோற்றபடி இருக்க

மீண்டு வர இயலா

அந்தகாரத்துள்

இழுத்துக்கொண்டே

பயணிக்கிறது இரவு


இரவின் பிடியில்

நிழல் கனவு

நிஜம் கண்ணீர்

எவற்றிற்கும் நிறமில்லை


நானும், என் நிறமற்ற 

இரவும் மட்டும்!!