Feb 22, 2011

நீயற்ற பொழுதுகள்

பின்னோக்கி முன்னோக்கி
எங்கெங்கோ ஓடி அலைந்தும்
கடைசியில் உன் முகம் நோக்கிடவே
கூடடைகின்றன உனக்கான 
என் நினைவுகள்...


இடைவெளி தண்டனையில் 
கணக்கிடுவதிலேயே 
கடந்து போகும் நாட்கள்..

உன் வெட்கச் சிரிப்பின்
நினைவுகளில் 
ஒற்றை நொடிப்பொழுது  
கோடிட்டுப்போகும் புன்னகை...

ஒவ்வொரு முறையும்
நீ உன் காதல் சொல்கையில் 
கண்ணோரம் துளிர்த்து நிற்கும்
கண்ணீர்த்துளி...

நீயின்றி எனைப் பார்க்கையில்
ஓடி வந்து கைகோர்த்துக்கொள்ளும்
கடற்கரை மணலும் 
ஆற்றங்கரைக் காற்றும்...

உன்னோடில்லா பொழுதுகள்
அத்தனையும் 
நம் நினைவுகளுடனே.... 

ஒவ்வொரு மணித்துளியும்..
உன்னுடன்
உன்னுடையவளாய் 
உன்னருகிலேயே 
உனக்காக மட்டுமே 
வாழ்ந்திட .......

நான்.......  







Feb 1, 2011

உயிர் பிணம்

காத்திருப்புகள் கடமையாய்..
களவு போன நிமிடங்களின் நினைவுகளோடு மட்டும்..
அரசமரநிழலினூடே மின்னும்
சூரிய நட்சத்திரங்களுக்குத் தெரியும்
காத்திருப்பின் அர்த்தம்...
எங்கோ தொலைந்து போய்க்கொண்டே இருக்கின்றன
எனக்கான அத்தனையும்...
சலனமில்லா ஒற்றையடிப்பாதையும்
இடுகாட்டு சாம்பல் வாசமும்
எரிக்கப்படக் காத்திருக்கும் 
உயிர் பிணத்திற்கு 
ஏதேதோ கூறிச்செல்வதாய்..
நீண்ட நெடு முற்றத்தில்
தனியாய் கிடக்கும் 
ஒற்றை சாய்வு நாற்காலியும்...
மேல்துண்டும் ..
அழுத்தும் தனிமையை உணர்த்துவதாய்.. 
பேசுவதற்காய் ஆயிரம் வார்த்தைகள்
சிதறிக்கிடப்பினும்...
தேடுவதற்கான தேவை 
இல்லாமலேயே போய்விட்டதாய்..
உணர்வுகள் மறத்துப்போயும்
ஒற்றை ஆறுதல்...

நாளை 
கல்லறைச் சருகுகள் துணையிருக்கும் எனக்கு...