Jan 6, 2013

சந்திக்கும் வரையில்..


முடிந்தவரை இறுக்கிக்கோர்த்தும் 
நழுவிச்சென்ற விரல்களை 
மீண்டும் இழுத்துக்கொள்ள 
ஏனோ முடியவில்லை 

பிரிந்துசெல்கையில்  இட்ட 
முத்திரையின் அழுத்தம் கூடியது..
உன் இதழ்களாலும் 
என் கன்னத்தின் 
கண்ணீர் வரிகளாலும்..


அறையெங்கும் கலைக்கமுடியாதபடி
உன் அடையாளங்கள்..
அழுக்குப் போர்வைகூட
உன் ஸ்பரிசம் தொட்டதால்
அருகிலேயே..

சாயம் ஏறிய
தேநீர் கோப்பைக்கும் தெரியும்
பசலை படர்ந்ததால்
அவை தீண்டதகாதன
ஆகிவிட்டதை..

போதாக்குறைக்கு
இந்த நெட்டை மரங்கள் வேறு..
மொட்டையாய் நின்று
என் தனிமைக்கு
பாரம் ஏற்றி...

மறுமுறை உன்னைக்
காணும் வரையிலும்
இரவுகள் விடியாமற்
போகக்கடவது!!!

கேட்கும் வரங்களெல்லாம்
கிடைக்கின்றனவோ
இட்ட சாபம் மட்டும்
பலித்திட??

மறுபடியும்
நாட்காட்டியும்
நானும் மட்டும்!!!


2 comments:

இராஜராஜேஸ்வரி said...

மறுமுறை உன்னைக்
காணும் வரையிலும்
இரவுகள் விடியாமற்
போகக்கடவது!!!

கேட்கும் வரங்களெல்லாம்
கிடைக்கின்றனவோ
இட்ட சாபம் மட்டும்
பலித்திட??

பிரிவென்னும் துயரம் அப்பிய வரிகள்..

maya said...

Superb :)

Post a Comment